டிப்பர் லாரி மோதி 3 மாணவர்கள் பலி
தேவனஹள்ளி: பெங்களூரு எலஹங்காவை சேர்ந்தவர்கள் தவுசிப், 17, சீனிவாஸ், 17, மணிகாந்த், 17. ஹுனசமரனஹள்ளியில் உள்ள அரசு பி.யு., கல்லுாரியில் படித்து வந்தனர். நண்பர்களான மூவரும், நேற்று காலை ஒரே பைக்கில் வெளியே புறப்பட்டனர். ஹொசகோட்டே கம்பலிபுராவுக்கு சென்று விட்டு, மீண்டும் எலஹங்காவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அகலகோட்டே அருகே செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையின் மறுபக்கம் சென்றது. அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. படுகாயம் அடைந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தப்பி சென்ற டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். விபத்து காட்சி அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.