நன்னடத்தை அடிப்படையில் 31 கைதிகள் இன்று விடுதலை
பெங்களூரு: நன்னடத்தை அடிப்படையில், கர்நாடகாவின் ஒன்பது சிறைகளில் இருந்து, 31 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா உட்பட மாநிலத்தின் ஒன்பது சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில், 31 பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமார், அரசுக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக் கொண்ட அரசு, பரப்பன அக்ரஹாராவில் 14, விஜயபுராவில் 5, பல்லாரியில் 3, மைசூரில் 2, பெலகாவியில் 2, கலபுரகியில் 2, ஷிவமொக்காவில் 2, தார்வாடில் ஒருவர் என, 54 வழக்குகளில் தொடர்புடைய 31 கைதிகளை, நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்க அனுமதி வழங்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் கவர்னருக்கு கடிதம் எழுதியது. இரு இடங்களில் இருந்தும் கைதிகளை விடுவிக்க அனுமதி கிடைத்தது. இதையடுத்து, மேற்கண்ட சிறைகளில் இருந்து, 27 ஆண் கைதிகள், மூன்று பெண் கைதிகள் இன்று விடுவிக்கப்படுகின்றனர். ஒரு பெண் கைதி ஏற்கனவே பரோலில் உள்ளார். சிறையில் காட்டிய நன்னடத்தை அடிப்படையிலும், புதிய வாழ்க்கையை கட்டி எழுப்ப வாய்ப்பு வழங்கும் வகையிலும், 31 கைதிகள் விடுவிக்கப்படுவதாக அரசு கூறி உள்ளது.