மோசமான நிலையில் 350 மதில் சுவர்கள்
பெங்களூரு: பெங்களூரில், எப்போது வேண்டுமானாலும் விழக்கூடிய நிலையில், 350க்கும் மேற்பட்ட மதில் சுவர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் 29ம் தேதி கனமழை பெய்தது. இதில், சிவாஜிநகர் பவுரிங் அரசு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு, மோசமான நிலையில் மதில் சுவர் இருந்ததே காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து, நகரில் மோசமான நிலையில் உள்ள மதில் சுவர்களை அடையாளம் காணும் பணியில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் ஈடுபட்டது. இதில், கே.ஆர்.,புரம், பட்டரஹள்ளி உட்பட பல பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட மதில் சுவர்கள் மோசமான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. மதில் சுவர்களை விரைவில் இடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.