பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 58 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு
பீதர்: பீதரில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 58 மாணவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் . பீதர் மாவட்டம், அவுராத் தாலுகாவின் ஜமால்பூர் கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இங்கு நேற்று மதியம் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இந்த உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்கள் வாந்தி எடுத்தனர். இ தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், ஊழியர்கள் பாதிக்கப்பட்ட 58 மாணவர்களையும் தாலுகா மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர், மருத்துவமனை அலறியடித்து ஓடி வந்தனர். மாவட்ட சுகாதார அதிகாரிகள், கல்வி துறை அதிகாரிகள் வந்து மாணவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறி, அலட்சியமாக இருந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். முதல்கட்ட விசாரணையில், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் அதிகப்படியான புழுக்கள் இருந்துள்ளன. சமைக்கும் போது இதனை சரியாக சுத்தம் செய்யாமல், புழுக்கள் கலந்த அரிசியில் சமைத்து மாணவர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.