உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / போதை ஓட்டுநர்களிடம் லஞ்சம் 9 பி.எம்.டி.சி., அதிகாரிகள் சஸ்பெண்ட்

போதை ஓட்டுநர்களிடம் லஞ்சம் 9 பி.எம்.டி.சி., அதிகாரிகள் சஸ்பெண்ட்

பெங்களூரு: மது அருந்திவிட்டு, பணிக்கு வரும் ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பஸ் இயக்க அனுமதி அளித்த பி.எம்.டி.சி., அதிகாரிகள் ஒன்பது பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரில் இயங்கும் பி.எம்.டி.சி., மின்சார பஸ் ஓட்டுநர்களால் விபத்துகள் அதிகரிக்கின்றன. உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. ஓட்டுநர்கள், அலட்சியமாக பஸ் ஓட்டுகின்றனர். சாலை விதிகளையும் பின்பற்றுவது இல்லை. பொது மக்களின் உயிருக்கு அபாயத்தை ஏற்படுத்துவது குறித்து, ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கிடையே பி.எம்.டி.சி.,யின் கன்னஹள்ளி பணிமனையில், மது அருந்தி விட்டு பணிக்கு வந்த ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பஸ் ஓட்ட, பணிமனை அதிகாரிகள் அனுமதி அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்க பி.எம்.டி.சி., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பி.எம்.டி.சி., அதிகாரிகள் கூறியதாவது: கன்னஹள்ளி பணிமனையில் மின்சார பஸ் ஓட்டுநர்கள் குடிபோதையில் பணிக்கு வருவதாகவும், லஞ்சம் பெற்றுக் கொண்டு, பஸ் ஓட்ட இவர்களை பணிமனை அதிகாரிகள் அனுமதி அளிப்பதாகவும், எங்களுக்கு புகார் வந்துள்ளது. பஸ்களை பெற பணிமனைக்கு வரும் ஓட்டுநர்கள், மதுபானம் அருந்தியுள்ளனரா இல்லையா என்பதை, அதிகாரிகள் சோதிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஒரு வேளை அவர் குடித்திருந்தால், பஸ் இயக்க அனுமதி அளிக்கக் கூடாது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் விதிகளின்படி நடந்து கொள்வது இல்லை. எனவே பி.எம்.டி.சி., நடவடிக்கை எடுத்துள்ளது. பணிமனை நிர்வாகி கிருஷ்ணா, போக்குவரத்து கண்காணிப்பாளர் சீனிவாஸ், அதிகாரிகள் அருண்குமார், மூத்த உதவியாளர் பிரதிபா உட்பட, ஒன்பது அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ