சித்தராமையாவுக்கு ஆதரவாக மாநாடு; மைசூரில் நடத்த அஹிந்தா சமூகம் திட்டம்
மைசூரு: சித்தராமையாவுக்கு ஆதரவாக, அவரது சொந்த ஊரான மைசூரில் மாநாடு நடத்த, அஹிந்தா சமூகம் திட்டமிட்டு உள்ளது. இதுதொடர்பாக, அஹிந்தா சமூக தலைவர்கள், மைசூரில் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். கர்நாடகாவில் அஹிந்தா என்ற, பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக உள்ளதாக, முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். அஹிந்தா சமூகம் எப்போதுமே, காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளது. தனது பதவிக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அஹிந்தா சமூகத்தை வில் அம்பாக பயன்படுத்துவதை, ம.ஜ.த., கட்சியில் இருந்த போதிலிருந்தே, சித்தராமையா வழக்கமாக வைத்து உள்ளார். அஹிந்தா தலைவர் என்று, காங்கிரஸ் மேலிடத்திடம் கூறித்தான், இரண்டு முறை முதல்வர் பதவியும் பெற்றார். தற்போது முதல்வர் பதவிக்காக சித்தராமையாவுடன், சிவகுமார் முட்டி மோதுகிறார். ஒருவேளை கட்சி மேலிடம், சிவகுமார் பக்கம் சாய்ந்து விட்டாலும், தனது பதவியை காப்பாற்றி கொள்வதில் மும்முரமாக உள்ள சித்தராமையா; மீண்டும் ஒரு முறை அஹிந்தா அஸ்திரத்தை பயன்படுத்த தயாராக உள்ளார். இந்நிலையில், சித்தரா மையாவுக்கு ஆதரவாக, அவரது சொந்த ஊரான மைசூரில் மாநாடு நடத்த அஹிந்தா சமூக தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர் . 'இன்றைய அரசியலில் சித்தராமையாவின் தேவை' என்ற தலைப்பில், மைசூரில் தனியார் ஹோட்டலில் இன்று அஹிந்தா சமூக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனையின் போது, மைசூரில் மாநாடு நடத்தும் தேதி நிர்ணயிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டின் மூலம், சித்தராமையா பக்கம் தான் நாங்கள் எப்போதும் உள்ளோம் என்று, காங்கிரஸ் மேலிடத்திற்கு செய்தி அனுப் பவும், அஹிந்தா சமூகம் தயாராகி வருகிறது.