உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  விமான நிலைய ஓடுதள பகுதியில் ஏ.ஐ., கேமராக்களால் மேலாண்மை

 விமான நிலைய ஓடுதள பகுதியில் ஏ.ஐ., கேமராக்களால் மேலாண்மை

பெங்களூரு: கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் ஏர்சைட் பாதுகாப்பு அமைப்பை பி.ஐ.ஏ.எல்., எனும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் தினமும் சராசரியாக 769 விமானங்களின் சேவை நடைபெறுகிறது. இதனால் அதிக போக்குவரத்து நெரிசல், விமான சேவையில் இடையூறு உள்ளிட்ட சில சிக்கல்கள் இருந்து வந்தன. இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், செயற்கை நுண்ணறிவுடன் இயங்கும் ஒருங்கிணைந்த ஸ்மார்ட் ஏர்சைட் பாதுகாப்பு அமைப்பை, பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் பி.ஐ.ஏ.எல்., நிறுவியுள்ளது. ஓடுதளங்களில் நிறுவப்பட்டுள்ள பிரத்யேக கருவிகள், கண்காணிப்பு கேமராக்களில் இருந்து பெறப்படும் சமிக்ஞைகளின் அடிப்படையில் வாகன இயக்கத்தை செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கணினி கட்டுப்படுத்தி, விமான சேவைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த பாதுகாப்பு அமைப்புக்கு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு கட்ட சோதனைக்கு பிறகு, கெம்பே கவுடா விமான நிலையத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்போது, மனித தலையீடு இன்றி தானாகவே எச்சரிக்கை விளக்குகளை இந்த அமைப்பு ஒளிரச்செய்யும். பாதையில் ஒழுங்கு ஏற்பட்டவுடன் தானாகவே எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளவும் செய்யும். இது, ஓடுபாதையில் அத்துமீறி நுழைதல் அல்லது நுாலிழையில் விபத்துகள் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும். விமான நிலையப் பாதுகாப்பு மீது உலகளவில் கவனம் அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ