சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு; ஐஸ்வர்யா கவுடா அதிரடி கைது
பெங்களூரு :காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் நகை வாங்கி மோசடி செய்த ஐஸ்வர்யா கவுடாவை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.மாண்டியா மலவள்ளி கிருகாவலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா கவுடா, 33. பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசிக்கும் இவர், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தங்கை என்று கூறி, நகைக்கடைகளில் இருந்து நகை வாங்கி, பணம் கொடுக்காமல் மோசடி செய்தார்.நந்தினி லே - அவுட்டில் உள்ள நகை கடை உரிமையாளர் வனிதா ஐதால் அளித்த புகாரில், ஐஸ்வர்யா, அவரது கணவர் மஞ்சுநாத் கைது செய்யப்பட்டனர். பின், அவர்கள் ஜாமினில் வந்தனர். இந்த வழக்கிற்கு பின், ஐஸ்வர்யா மீது மேலும் சில நகைக்கடை உரிமையாளர்கள் புகார் செய்தனர். சோதனை
நிலம் வாங்கி தருவதாக கூறி 20 கோடி ரூபாய் ஏமாற்றியதாக, மாண்டியா டாக்டர் ஒருவரும் புகார் செய்தார். கைதில் இருந்து தப்பிக்க, நீதிமன்றத்தில் இருந்து ஐஸ்வர்யா தடை வாங்கி இருந்தார்.இதற்கிடையில், அவரது வங்கிக்கணக்கை போலீசார் ஆய்வு செய்தபோது, மூன்று மாதங்களில் 50 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரிந்தது.சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்ற தகவலின்பேரில், அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் ஐஸ்வர்யாவின் வீடுகளில் சோதனை நடத்தினர்.ஐஸ்வர்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த, தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. 14 நாட்கள்
சோதனையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, சில ஆவணங்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கிடைத்தன. இதுபற்றி விசாரித்தபோது ஐஸ்வர்யா பதில் சொல்லவில்லை. இதனால் அவரை நேற்று முன்தினம் இரவே, சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காமல், மழுப்பலாக பதிலளித்ததால் ஐஸ்வர்யா நேற்று கைது செய்யப்பட்டார். பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு, நீதிபதி விஸ்வநாத் கவுடர் அனுமதி அளித்தார்.ஐஸ்வர்யாவுக்கு, அரசியல் பிரமுகர்கள் நிறைய பேருடன் தொடர்பு உள்ளது. விசாரணையின்போது அரசியல்வாதிகளை பற்றி அவர் ஏதாவது சொன்னால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சிக்கல் தான் என்று கூறப்படுகிறது.