பஜ்ரங் தள் தலைவருக்கு நீதிமன்ற காவல்
மங்களூரு: கொலை வழக்கில் சிக்கிய பஜ்ரங் தள் தலைவர் பாரத் கும்தேலுக்கு 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தட்சிண கன்னடா மாவட்ட பஜ்ரங் தள் தலைவர் பாரத் கும்தேலு, 29. இவர் பன்ட்வால் புது கிராமத்தை சேர்ந்த அப்துல் ரகுமான் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக போலீசாரால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, பாரத் தலைமறைவானார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இரு சமூகங்களுக்கு இடையில் பிரச்னை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கோகா எனும் கர்நாடக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக, தட்சிண கன்னடா எஸ்.பி., அருண் கூறி உள்ளார். இந்த கோகா சட்டத்தின் கீழ் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும். இவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் போலீசுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று மங்களூரில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பாரத் சரணடைந்தார். நீதிபதி பசவாஜ் பாரத்துக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்குவதாக உத்தரவிட்டார். இதனால் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.