உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட எம்.பி.ஏ., பட்டதாரி மீண்டும் கைது

 கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட்ட எம்.பி.ஏ., பட்டதாரி மீண்டும் கைது

பெங்களூரு: பெங்களூரில் கள்ள நோட்டுகளை மீண்டும் புழக்கத்தில் விட்ட, எம்.பி.ஏ., வாலிபர் கைது செய்யப்பட்டார். ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதியை சேர்ந்தவர் ருத்ரேஷ், 41, எம்.பி.ஏ., முதுகலை பட்டதாரி. கடந்த 2ம் தேதி தனது நண்பர்களுடன் துமகூரில் உள்ள ஹொசஹள்ளி கைமாரா அருகில் உள்ள கடையில் ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினார். இதற்காக, தன்னிடம் இருந்த, 500 ரூபாய் நோட்டை, கடை உரிமையாளரிடம் கொடுத்தார். அவரும், பணத்தை வாங்கி, மீதியை ருத்ரேசிடம் வழங்கினார். சிறிது நேரத்தில் ருத்ரேஷ் கொடுத்த பணத்தில் சந்தேகம் அடைந்து ஆய்வு செய்தபோது, கள்ள நோட்டு என்பதை அறிந்தார். உடனடியாக ஹூலியாரு போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடைக்காரரிடம் விசாரித்த போது, 'நீல நிற மாருதி ஆல்டோ' காரில் வந்தவர்கள் தான் பணத்தை கொடுத்தாக தெரிவித்தார். இதன் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார், பெங்களூரு மாதநாயகனஹள்ளி கைங்கொண்டனஹள்ளியில் ருத்ரேஷ் இருப்பதை உறுதி செய்தனர். நேற்று முன்தினம் மாலை அவரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். இதை பார்த்த ருத்ரேஷ், வீட்டில் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். ஆனாலும் போலீசார் அவரை கண்டுபிடித்து கைது செய்தனர். இதற்கு முன், 2024ல் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக, ருத்ரேஷ் உட்பட ஆறு பேரை, தாவணகெரே போலீசார் கைது செய்தனர். அப்போது, 7.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 200 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுகளையும், 43 ஆயிரம் ரூபாய் அசல் நோட்டுகளையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். தொழில்நுட்ப திறனில் திறமையான ருத்ரேஷ், சொந்த தொழில் செய்து வந்தார். கொரோனாவுக்கு பின், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதுடன், எங்கும் வேலையும் கிடைக்கவில்லை. இதனால் கள்ள நோட்டுகளை அச்சிட்டு, திருவிழாக்கள், சந்தைகள், அதிக மக்கள் கூடும் கடைகள் போன்ற நெரிசலான இடங்களில் புழக்கத்தில் விட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிறையில் இருந்து விடுதலையான பின், மீண்டும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட போது, மீண்டும் போலீசில் சிக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !