பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் மீது முட்டை வீசப்பட்டது சரியல்ல
பெங்களூரு: ''பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் மீது முட்டை வீசப்பட்டது சரியல்ல,'' என, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: நீட் வினாத்தாள் கசிந்தது பற்றி முன்கூட்டியே பிரதமர் மோடி பேசியிருக்க வேண்டும். இப்போது பேசி என்ன பயன். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். யாரையும் காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட கூடாது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். அவர் ஒருவர் ராஜினாமா செய்வதால், மத்திய அரசுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. நம் நாட்டு இளைஞர்கள் எதிர்காலம் பாழாக்கப்படுகிறது. பா.ஜ., தலைவர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டு பிள்ளைகளும் நீட் தேர்வுக்கு படிக்கின்றனர் என்பதை மறக்க வேண்டாம். உயர்தர கல்வி வினாத்தாள் கசிந்தது பற்றி லோக்சபாவில் விவாதம் நடக்கட்டும். அனைத்து பிரச்னைகள் பற்றி விவாதிக்க வேண்டும். பா.ஜ., தலைவர்கள் எங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை நாங்கள் ஏற்று கொள்கிறோம். அது போல, நாங்கள் வைக்கும் விமர்சனங்களை ஏற்கவும் அவர் பழக வேண்டும். இப்போது நடப்பது அரசியல் பிரச்னை இல்லை; நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்னை. ஆற்றல்மிக்க, உயர்தர கல்வியை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பு. எந்த தேர்வு நடந்தாலும் அது வெளிப்படையாக இருக்க வேண்டும். இந்தியா திறமையானவர்களின் நாடு. நம்மிடம் இருப்பது போல, உலகில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு திறமை இல்லை என்பதை, பல நாடுகளின் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டு உள்ளனர். உலகம் முழுதும் நம்மை கவனிக்கிறது. இந்த நேரத்தில் கல்வியின் தரத்தை நாம் பராமரிக்க வேண்டும். துாய்மையான ஆட்சி காங்கிரஸ் அலுவலகம் அருகே பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் மீது முட்டை வீசப்பட்டது சரியல்ல. முட்டை வீசியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் பா.ஜ., என்ன செய்தது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ., அலுவலகங்களில் இருந்தும் தடி, துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. மாநிலத்தில் கோட்வால் ஆட்சி நடப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியுள்ளார். அவர் என்ன வேண்டும் என்றாலும் பேசட்டும். மாணவர் அமைப்பில் இருந்து முதல்வர் பதவிக்கு வந்துள்ளேன். நான் கிராமத்தில் பிறந்தவன். துாய்மையான ஆட்சி நிர்வாகத்தை நான் கொடுப்பதை அவர்களால் தாங்க முடியவில்லை. இதனால் வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.