பங்கார்பேட்டை முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ஜ., கண்டனம்
பங்கார்பேட்டை: பங்கார் பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமிக்கு அமைச்சர் பதவி வழங்காததால், அவரது ஆதரவாளர்கள், பங்கார்பேட்டையில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். கோலார் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த பங்கார்பேட்டை தொகுதி காங்., - எம்.எல்.ஏ., - எஸ்.என்.நாராயணசாமி, தனக்கு அமைச்சர் பதவி வழங்காததால், மாநில காங்கிரஸ் தலைமை மீது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். அவரின் ஆதரவாளர்கள் நேற்று, பங்கார்பேட்டையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினர். இதனால், அரசு, தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கவில்லை. இதுகுறித்து, பா.ஜ., முன்னாள் எம்.பி., முனிசாமி கூறுகையில், ''எம்.எல்.ஏ. நாராயணசாமிக்கு அமைச்சர் பதவி கொடுக்காததால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்பட்டது. இது, மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருந்தது,'' என்றார் . அமைச்சர் பதவி வழங்காதது குறித்து, அமைச்சர் கே.ஹெச்.முனியப்பா கூறும் போது, ''கோலார் மாவட்டத்தவருக்கு அமைச்சர் பதவி வழங்கி இருக்க வேண்டும். அமைச்சர் பதவி வேண்டும் என்பவர்கள், என்னிடம் யாருமே கோரவில்லை. இது தொடர்பாக நானும் மேலிடத்தலைவர்கள் யாரையும் சந்திக்கவும் இல்லை,'' என்றார். தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா சசிதர் கூறுகையில், ''கட்சி என்பது தாய்க்கு சமமானது. உரிய பதவியை யாருக்கு, எப்போது வழங்க வேண்டும் என்று மேலிடத்துக்கு தெரியும். கோலார் மாவட்டத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என நானும் எதிர்ப்பார்த்தேன். வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.