| ADDED : மார் 17, 2026 06:10 AM
பெங்களூரு: ஜி.பி.ஏ., தலைமை அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில், அதிகாரிகள், ஊழியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகைப்பதிவை கட்டாயமாக்க வேண்டும் என, பா.ஜ., பிரமுகர் என்.ஆர்.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஜி.பி.ஏ., தலைமை அலுவலகம், ஐந்து மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் அதிகாரிகள், ஊழியர்கள் என 2,818 பேர் பணிபுரிகின்றனர். அவர்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் காலை 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை அலுவலகத்தில் இருப்பது இல்லை. கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி எடுக்கப்பட்ட முடிவின்படி, அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு கொண்டு வரப்பட்டது. செயல்பாட்டில் இருந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு, கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், அதிகாரிகள், ஊழியர்கள் தங்கள் இஷ்டத்திற்கு பணிக்கு வருகின்றனர். இதனை தவிர்க்க பயோமெட்ரிக் முறையை மீண்டும் கட்டாயமாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.