உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  2 தாலுகா அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

 2 தாலுகா அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

உத்தர கன்னடா: ஒரே நாளில் இரு தாலுகா அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர கன்னடா மாவட்டம் கார்வார், பட்கல் தாலுகா அலுவலகங்களுக்கு தனித்தனியாக நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், 'விரைவில் அலுவலகத்தில் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடக்கும். தமிழர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் பழிவாங்கல்' என்று கூறப்பட்டிருந்தது. இதை பார்த்த ஊழியர்கள், அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதிகாரிகளும் உடனடியாக போலீசாருக்கும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊழியர்களை வெளியேற்றினர். அலுவலகத்தின் ஒவ்வொரு மூலையிலும் சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பின், இது புரளி என்பதை உறுதி செய்தனர். மாவட்ட அரசு அலுவலகங்களை குறிவைத்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவது, பல மாவட்ட மக்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது கார்வார், பட்கலில் தனித்தனியாக இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாவட்ட எஸ்.பி., தீபன் கூறுகையில், ''இன்று (நேற்று) காலை கார்வார், பட்கல் தாலுகா அலுவகங்களுக்கு மின்னஞ்சல் மூலம், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக புகார் வந்தது. உடனடியாக நாங்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தோம். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !