உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உயரமான ராணுவ முகாமில் பணிபுரியும் கேப்டன் சுப்ரீதா

உயரமான ராணுவ முகாமில் பணிபுரியும் கேப்டன் சுப்ரீதா

உலகில் உள்ள மிக உயரமான ராணுவ முகாம்களில் ஒன்று, இமயமலையில் உள்ள சியாச்சின் பனிப்பாறை. இங்கு மிக குளிராக காணப்படும். இந்த குளிரிலும் ராணுவ வீரர்கள், தேசத்தை பாதுகாப்பதில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றனர். இங்கு, பணியில் அமர்த்தப்பட்ட முதல் பெண் வான் பாதுகாப்பு அதிகாரி யார் என உங்களுக்கு தெரியுமா. அவர் வேற யாருமில்லை, நம் மாநிலத்தின் மைசூரு மாவட்டத்தை சேர்ந்த சி.டி.சுப்ரீதாவே. இவர், திருமலேஷ் -நிர்மலா தம்பதிக்கு மகளாக பிறந்தார். மைசூரு மாவட்டத்தில் தனது பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்தார். குவெம்பு நகரில் உள்ள ஜெ.எஸ்.எஸ்., சட்ட கல்லூரியில் படிப்பை முடித்தார். பள்ளி, கல்லுாரி பருவத்தில் என்.சி.சி.,யில் இருந்தார். 2015ம் ஆண்டு நடந்த அகில இந்திய வாயு சைனிக் முகாம், 2016 குடியரசு தின விழாவில் பங்கேற்றார். அப்போது, அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டப்பட்டார். 2016ல் மாலத்தீவில் நடந்த இளைஞர்கள் முகாமில் பங்கேற்றார். 2020ம் ஆண்டு நமது ராணுவத்தில் நுழைந்தார். 2021ல் சுப்ரீதா லெப்டினன்ட்டாக நியமிக்கப்பட்டார். சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பயிற்சி பெற்றார். இதன்பின், வான் பாதுகாப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, அனந்தநாக், ஜபல்பூர், லடாக் பகுதிகளில் பணியில் அமர்த்தப்பட்டார். இதன் பின், கடந்த ஆண்டு உலகில் உள்ள மிக உயரமான ராணுவ முகாம்களில் ஒன்றான இமயமலையில் உள்ள சியாச்சினில் முதல் பெண் வான் பாதுகாப்பு அதிகாரியாக கேப்டன் சுப்ரீதா நியமிக்கப்பட்டார். இதன் மூலம் தேசிய அளவில் பிரபலம் அடைந்தார். தற்போதும், அந்த பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற ரியல் ஹீரோயின்களை இளம் தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையின் முன்மாதிரியாக எடுத்து கொண்டால், அவர்களும் தங்கள் வாழ்வில் பெரிய உயரத்திற்கு செல்லலாம்; சாதிக்கலாம். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை