சினிமா டிக்கெட் கட்டணம் அதிகபட்சம் ரூ.200 நிர்ணயம்
பெங்களூரு: 'மல்டிபிளக்ஸ்' உள்ளிட்ட அனைத்து விதமான திரையரங்குகளிலும் அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் அதிகபட்ச கட்டணமாக 200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.புதிதாக திரைக்கு வரும் திரைப்படங்கள் ஓ.டி.டி.,யில் ஒரு வாரத்திற்குள் வெளியிடுவதால், திரையரங்குகளுக்கு சென்று திரைப்படம் பார்க்க, மக்களிடையே ஆர்வம் குறைந்தது. இதனால் கர்நாடகாவில் பல திரையரங்குகள் மூடப்படும் நிலையில் உள்ளன.மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் சீரான கட்டணம் இல்லாமல் இருப்பதும், பண்டிகை நேரத்தில் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்துவதும், மக்கள் திரையரங்குக்கு வராமல் இருப்பதற்கு காரணமாக சொல்லப்பட்டது.ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் என்று, அரசுக்கு, பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை இருந்தது.இந்நிலையில் மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து மொழி திரைப்படங்களுக்கு, அதிகபட்சமாக 200 ரூபாய் கட்டணமாக நிர்ணயித்து அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த கட்டணத்திற்குள் வரியும் அடங்கும். ஆட்சேபனை இருந்தால் அதை தெரிவிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.