சி.எம்., ரேசில் அமைச்சர்கள் பா.ஜ., அசோக் விமர்சனம்
மைசூரு: ''அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் முதல்வர் பதவி தொடர்பான சண்டையே தொடரும். அமைச்சர்கள் பலரும் சி.எம்., ரேசில் புதிதாக இணைவர். இதனால், மக்கள் பெரிதாக பாதிக்கப்படுவர்,''என எதிர்க்கட்சி தலைவர் அசோக் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து, அவர் கூறியதாவது: முதல்வர் மாற்றத்துக்கான காலக்கெடு கடந்த நவம்பரிலே முடிந்து விட்டது. முதல்வர் மாற்றம் என்பது தற்போது காலாவதியாகி விட்டது. மாநில அரசு செத்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. முதல்வர் பதவிக்கான சண்டை மட்டுமே நடக்கிறது. 30 எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு சென்று உள்ளனர். அரசு சரியாக நடக்கவில்லை; ஆட்சியாளர்களும் சரியில்லை. காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் எச்சரிக்கையை மீறி எம்.எல்.ஏ.,க்கள் டில்லிக்கு பயணித்தனர். இதன் மூலம், அவர் வார்த்தைக்கு மரியாதையில்லை என்பது தெளிவாக தெரிகிறது. காங்கிரசில் ஒற்றுமை இல்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் முதல்வர் பதவி தொடர்பான சண்டையே தொடரும். அமைச்சர்கள் பலரும் சி.எம்., ரேசில் புதிதாக இணைவர். இதனால், மக்கள் பெரிதாக பாதிக்கப்படுவர். இதுவே, பா.ஜ.,வின் ஆட்சி அமைந்திருந்தால் நல்லாட்சி அமைந்திருக்கும். பிரதமர் மோடி கை காட்டும் நபரே முதல்வராக ஆகியிருப்பார். இதனால், பிரச்னைகள் எதுவும் நடந்திருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.