உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் திருப்பதி தேவஸ்தானம் எதிர்ப்பு

 முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் திருப்பதி தேவஸ்தானம் எதிர்ப்பு

- நமது நிருபர் -: ''திருமலை வெங்டேஸ்வரருக்கு முதல் ஆரத்தி எப்போதுமே மைசூரு அரச குடும்பத்திற்கே ஒதுக்கப்பட்டு உள்ளது. அதை மாற்றும் கேள்விக்கு இடமில்லை,'' என, முதல்வர் சிவகுமாரின் வேண்டுகோளை, திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி மறுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் சிவகுமார், 'திருமலையில் கர்நாடகா சார்பில் நடக்கும் ஆரத்தியில், முதல்வர் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும். மேலும், கர்நாடக அரசு சார்பில் வரும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., க்கள், நீதிபதிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதற்கு, டி.டி.டி., எனும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி அளித்த பேட்டி: திருமலை சீனிவாசரின் முதல் ஆரத்தி எப்போதும் மைசூரு அரச குடும்பத்திற்கே ஒதுக்கப்பட்டு உள்ளது. அதை மாற்றும் கேள்விக்கே இடமில்லை. யது வம்சத்தை சேர்ந்த மைசூரு அரச குடும்பத்தின் வாசஸ்தல தெய்வம் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ஆவார். குறிப்பாக, மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சி காலத்தில், இக்கோவிலுக்கு ஏராளமான நன்கொடைகள், ஆபரணங்கள், பல்வேறு வகையான சேவைகள் வழங்கப்பட்டன. இந்த வரலாற்று பங்களிப்பை கவுரவிக்கும் வகையில், முதல் ஆரத்தி, மைசூரு அரச குடும்பத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. இது, எந்த அரசியல் பதவிக்கும் வழங்கப்படும் கவுரவம் அல்ல. இது, மைசூரு வம்சத்தின் வரலாற்று பங்களிப்பை நினைவுகூரும், ஒரு மத ரீதியான பாரம்பரியம். எனவே, முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அல்லது வேறு எந்த அரசியல் பதவியில் இருப்பவரும் இந்த கவுரவத்தை வழங்க அனுமதியில்லை. அதே நேரத்தில், திருமலை கோவில் அனைத்து பக்தர்களுக்கும் சமமானது. மத நடைமுறைகளை அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது பொருத்தமற்றது. திருப்பதி ஒரு புனித தலம். இங்கு அரசியல் நுழையக்கூடாது. ஒரு மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால், நாளை தமிழகம், கேரளா உட்பட பிற மாநிலங்களும் இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்க கூடும். இது தேவையற்ற சர்ச்சையை உருவாக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !