பெங்., உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு உதவி தேவை மத்திய அரசிடம் கேட்கிறார் முதல்வர் சிவகுமார்
- நமது நிருபர் -: ''பெங்களூரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு மத்திய அரசின் உதவி தேவை,'' என, நிடி ஆயோக் கூட்டத்தில், கர்நாடக முதல்வர் சிவகுமார் பேசினார். நிடி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது: இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில், கர்நாடகா வலிமையான இயந்திரமாக திகழ்கிறது. நாட்டின் மக்கள் தொகையில், 5 சதவீதத்தை கொண்டுள்ள கர்நாடகா, 2025 - 2026ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9.19 சதவீதம் பங்களிப்பு கொடுத்துள்ளது. ஏற்றுமதியில் எங்கள் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. இது, தேசிய பங்கில், 40 சதவீதம். கலிபோர்னியாவை விட பெங்களூரில் அதிக தொழில்நுட்ப வல்லுனர்கள் உள்ளனர். ஆராய்ச்சி, புத்தாக்கம், தொழில்நுட்ப நிறுவன மையங்களில் ஒன்றாக கர்நாடகா திகழ்கிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா - 2047 இலக்கை அடைய, எங்கள் மாநிலம் மிக பெரிய உதவியாக இருக்கும். வாழ்க்கை தரம் நாங்கள் அமல்படுத்தியுள்ள ஐந்து வாக்குறுதிகளும், மனித மூலதனத்தின் தரத்தை மேம்படுத்தியுள்ளது. இளைஞர்களே நமது மிகப்பெரிய சொத்து. பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கு இலவச பஸ் திட்டத்தை அறிவித்துள்ளேன். மாநில பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, 24 சதவீத தொகையை எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு ஒதுக்கியுள்ளோம். நலிவடைந்த மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளோம். 'நரேகா' திட்டத்தில் பணியாற்றும் கிராமப்புற பெண்கள் வசதிக்காக, அவர்களின், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பராமரிக்க, குழந்தைகள் காப்பகம் அமைக்கும் அரசின் முயற்சியை, நிடி ஆயோக் அங்கீகரித்து உள்ளது. மாநிலத்தின் இலக்கை நோக்கி, தொழிலாளர் படையை உருவாக்குவதற்கு, 30 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 4,432 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை கொண்டு வருவதை, கர்நாடகாவின் திறன் மேம்பாட்டு கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. அதிவேக நகரம் தெற்கு ஆசியாவின் அதிவேகமான நகரமாகவும், புத்தாக்கம், தொழில்நுட்பத்திற்காகவும் பெங்களூரு அங்கீரிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்போரில், 40 சதவீதம் பேர் மற்ற மாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். எனவே, உள்கட்டமைப்பு மேம்பாட்டை மேற்கொள்ள மத்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தை தாங்கும் திறனை அதிகரிக்கவும், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்த துவக்கி உள்ளோம். இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் ஆதரவை நாடுகிறோம். விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கவும், உணவு பாதுகாப்பை வலுப்படுத்தவும் டிஜிட்டல் வேளாண் சந்தைப்படுத்துதல் பயன்படுத்தப்படுகிறது. அரசு ஆதரவு கர்நாடகாவில் பாரம்பரிய பாதுகாப்பை ஊக்குவிப்பது, விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவது, சுற்றுலா முதலீடுகளை எளிதாக்குவது, சுற்றுலா தல நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் மத்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவை நாடுகிறோம். பெங்களூரை, பக்கத்து மாவட்டங்களான கோலார், மைசூரு, துமகூரு, சிக்கபல்லாபூருடன் இணைக்கும் விரைவு ரயில் திட்டத்திற்கு, மத்திய அரசின் அனுமதி வழங்க கோரிக்கை வைக்கிறோம். பெங்களூரை தாண்டி தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நகர் புற பொருளாதார வளர்ச்சி மையத்தை வலுப்படுத்தவும் மத்திய அரசு உதவி தேவை. இவ்வாறு அவர் பேசினார்.