உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் தொகுதி மறுவரையறை செய்ய முதல்வர் சித்து விருப்பம்

 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் தொகுதி மறுவரையறை செய்ய முதல்வர் சித்து விருப்பம்

மைசூரு: ''மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின் தொகுதி மறுவரையறை செய்வது பொருத்தமாக இருக்கும்,'' என்று, முதல்வர் சித்தராமையா தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: மகளிர் இடஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் எதிராக உள்ளது என்று, பா.ஜ., பொய் தகவலை பரப்புகிறது. தொகுதி மறுவரையறையை செயல்படுத்துவதற்காக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, மத்திய அரசு ஒரு கருவியாக பயன்படுத்த பார்த்ததால், நாங்கள் எதிர்த்தோம். தற்போது நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின், தொகுதி மறுவரையறை செய்வது பொருத்தமாக இருக்கும். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 50 சதவீத இடஒதுக்கீடு மசோதா கொண்டு வந்தது காங்கிரஸ் தான். மகளிர் இடஒதுக்கீடு மசோதா 2023ம் ஆண்டே நிறைவேற்றப்பட்டு அப்போதே அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஏன் இவ்வளவு நாட்கள் மத்திய அரசு காத்து இருந்தது. நாங்கள் ஐந்து வாக்குறுதிகளை அளித்தபோது, கர்நாடகா திவாலாகி விடும் என்று, பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். இப்போது பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வாக்குறுதி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு நாங்கள் தான் முன்னோடி. பிரதமர் சமீபத்தில் பெங்களூரு வந்த போது, எனது காது அருகில் வந்து ஏதோ பேசியது, சமூக வலைதளங்களில் விவாதமாகி உள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டிற்கு உங்கள் நிலைப்பாடு என்ன என்று என்னிடம் கேட்டார். நா ன் ஆதரவாக இருப்பதாக கூறினேன். அவ்வளவு தான் வேறு எதுவும் பேசவில்லை. தென்மாநிலங்கள் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக உள்ளன. ஆனால் வடமாநிலங்களில் நிலைமை அப்படி இல்லை. இது பா.ஜ.,வுக்கு சாதகமாகவும், தெ ன்மாநிலங்களுக்கு பாதகமாகவும் உள்ளது. சாந்திநகர் எம்.எல்.ஏ., ஹாரிஸ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய செல்லவில்லை. எனக்கு கிடைத்த தகவல்படி தி.மு.க., தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும். கேரளாவில் காங்கிரஸ் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை