இ - பட்டா மேளா விழிப்புணர்வு அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவு
பெங்களூரு : 'பொது மக்களிடம் இ - பட்டா மேளா குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும்' என, மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உத்தரவிட்டுள்ளார்.பெங்களூரு எலஹங்கா மண்டலத்தின் கீழ் உள்ள பல பகுதிகளை நேற்று பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், பிற அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:மாநகராட்சி அதிகாரிகள் பல இடங்களில் நடக்கும் 'இ - பட்டா' மேளா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எலஹங்கா சட்டசபை தொகுதிக்குள் உள்ள நான்கு இடங்களில் இ - பட்டா மேளாக்கள் நடக்கும். எலஹங்கா ஏரிப்பகுதியில் உள்ள நடைபாதைகளை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.சென்ட்ரல் விஹார் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகள் விரைவில் முடிக்க வேண்டும். மீனாட்சி கல்லுாரி அருகே உள்ள சாலைகளின் இரு புறங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.மல்லேஸ்வரத்தில் சுப்பிரமணியநகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இது குறித்து நன்மை, தீமைகளை ரயில்வே அதிகாரிகள் ஆராய வேண்டும். யஷ்வந்த்பூர் சந்திப்பில் ரயில்வே பாலம் அகலப்படுத்தும் பணியில், நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.எலஹங்கா மண்டலத்தில் உள்ள அனைத்து நடைபாதைகள், தெரு விளக்குகள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்படாத கட்டடங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆபத்தான நிலை அல்லது காய்ந்த மரங்களை அகற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.