எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு காங்கிரஸ் அநீதி: பொம்மை
பெங்களூரு: ''உள் இட ஒதுக்கீட்டில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு காங்கிரஸ் அரசு அநீதி இழைக்கிறது,'' என, முன்னாள் முதல்வரும், பா.ஜ., - எம்.பி.,யுமான பசவராஜ் பொம்மை குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து, அவர் நேற்று, பெங்களூரில் அளித்த பேட்டி: உ ள் இட ஒதுக்கீட்டில் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்திற்கு காங்கிரஸ் அரசு அநீதி இழைக்கிறது. உள் இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசியலமைப்பு சாசனத்தை பின்பற்ற வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுகள், நாக மோகன்தாஸ் கமிஷன் அறிக்கை மற்றும் ஜே.சி.மதுசுவாமி அறிக்கை ஆகியவற்றில் எதையும் காங்கிரஸ் அரசு பின்பற்றவில்லை. எஸ்.சி., - எஸ்.டி., இன மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து உள்ளது. இதை தலித் சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். உள் இட ஒதுக்கீட்டில் நடந்த அநீதி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்து உள்ளனர். விரைவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடக்கும். முதல் கட்டமாக மாணவர்கள், அரசு வேலைக்கு தயாராகும் நபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.