மாணவர்களுக்கு இழப்பீடு காங்., தலைவர் வலியுறுத்தல்
பெங்களூரு: ''நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என கர்நாடக காங்கிரஸ் தலைவர், பி.கே.ஹரிபிரசாத் கூறி உள்ளார். நேற்று அவர் அளித்த பேட்டி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது மட்டும் போதாது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அவரது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நீட் தேர்வால், 22 மாணவர்கள் உயிரிழந்து உள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது டில்லி போலீசார் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பெங்களூரில் நடந்த போராட்டத்தில் டில்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள உமர் காலித்தின் படம் காண்பிக்கப்பட்டதில் தவறில்லை. உமர் காலித் ஐந்து ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவர் மீது ஏன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இது என்ன பாகிஸ்தானா... மத்திய அரசு, பாகிஸ்தான் அரசு போல செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.