தங்கச் சுரங்க நிறுவனம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
தங்கவயல் : தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.தங்கவயல் தங்கச் சுரங்கத்தை மூடியபோது தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய இறுதி தொகையில் 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது.தங்கச் சுரங்கத்தை உலகளாவிய டெண்டர் விடப்படும்போது, அதை ஏற்கும் நிறுவனம், தொழிலாளர்களுக்கு மீதி, 50 சதவீத தொகையை வழங்க வேண்டும் என்று சுரங்கத்துறை அறிவித்திருந்தது. ஆனால் உலகளாவிய டெண்டர் விடப்படவில்லை.தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இறுதி தொகையை பெறாமலேயே 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இறந்துவிட்டனர்.இந்நிலையில் தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர்கள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி, வழக்கு தொடர்ந்தனர்.விசாரணை முடிவில், தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகையை 6 சதவீத வட்டியுடன் வழங்க 2024 மே 9ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், வட்டியுடன் நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை.முன்னாள் தங்கச் சுரங்கத் தொழிலாளி மூர்த்தி என்பவர், சுரங்க நிறுவனம் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார். இம்மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக வக்கீல் பாலன் தெரிவித்துள்ளார்.