சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டவர் கைது
பன்டேபாளையா : பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில், வெடிகுண்டு வீசும்படி வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.பெங்களூரின், மங்கம்மனபாளையாவில் வசிப்பவர் நவாஜ், 30. இவர் 'பப்ளிக் சர்வென்ட்' என்ற ஐ.டி.,யில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் 'இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டில் ஏன் குண்டு வீசவில்லை. மக்கள் நிம்மதியுடன் இருக்கும் போது, இத்தகைய சூழ்நிலையை உருவாக்கினார். எனவே முதலில் பிரதமரின் வீட்டில் குண்டு போடுங்கள்' என பேசியிருந்தார்.இதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பரவியது. இதை கவனித்து நடவடிக்கை எடுத்த பன்டேபாளையா போலீசார், நவாஜை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர் தற்போது பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரிடம் விசாரித்த போது, இவர் சமூக வலைதளங்கள் வழியாக, பாகிஸ்தான் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கு ஆதரவாக தகவல்களை வெளியிட்டது தெரிந்தது.