இந்திரா உணவகங்களில் டிஜிட்டல் கட்டண முறை
பெங்களூரு: ''இந்திரா உணவகத்தில் விரைவில் டிஜிட்டல் கட்டண முறை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சட்டசபையில் நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் பைரதி சுரேஷ் தெரிவித்தார். சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்: காங்கிரஸ் - ஜக்தேவ் குட்டேதார்: கலபுரகியில் உள்ள இந்திரா உணவகத்தில் மெனுவின்படி, சிற்றுண்டிகள் வழங்கப்படுவதில்லை. உணவின் தரமும் சரியில்லை என்று புகார்கள் வருகின்றன. இம்முறையை சரி செய்து, உணவகங்களில் டிஜிட்டல் கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். அமைச்சர் பைரதி சுரேஷ்: எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, உணவகத்தில் மெனுவின்படி, அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப அவ்வப்போது உணவு வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எனக்கு புகார்கள் வரவில்லை. இதை மாவட்ட கலெக்டர் கண்காணித்து வருகிறார். உணவகங்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்திரா உணவகங்களில் டிஜிட்டல் கட்டண முறையை அமல்படுத்த, மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.