ஆன்லைன் டிரேடிங் அடிமையான இளைஞரை குணமாக்கிய டாக்டர்கள்
பெங்களூரு: 'ஆன்லைன் டிரேடிங்'கில் ஈடுபட்டு, 80 லட்சம் ரூபாயை பறிகொடுத்து, மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இளைஞரை, நிமான்ஸ் டாக்டர்கள் சிகிச்சை அளித்து குணப்படுத்தினர். பெங்களூரில் வசிக்கும், 30 வயது இளைஞர், பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர். தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்தார். நல்ல வருவாயும் கிடைத்தது. இவருக்கு யு டியூப் வீடியோ பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. இது அவரை ஆன்லைன் டிரேடிங்கில் பணம் முதலீடு செய்ய துாண்டியது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தார். முதலில் ஓரளவு லாபம் வந்ததால், அதிகமான தொகையை முதலீடு செய்தார். இதற்கு அவர் அடிமையாகிவிட்டார். வீட்டில் இருக்கும் போதும், அலுவலக பணியின் போதும், மொபைல் போனில் மணிக்கணக்கில், யு டியூபில் வரும் ஷேர் மார்க்கெட் வீடியோக்களை பார்த்தார். இரவு உறங்காமல், ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற, இறக்கங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தார். ஆன்லைன் டிரேடிங் செய்யாத நேரங்களில், அவரது கை, கால்கள் நடுங்கின. அதிக பதற்றமடைந்தார். டிரேடிங்கில் அவருக்கு லாபத்தை விட, நஷ்டமே அதிகரித்தது. 80 லட்சம் ரூபாய் கடனாளியானார். இதை குடும்பத்தினருக்கு தெரியாமல், மூடி மறைக்கும் நோக்கில், தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். நாளைடைவில் மன அழுத்தம் அதிகரித்து, நோயாளியானார். இதை கவனித்த குடும்பத்தினர், 'நிமான்ஸ்' மனநல மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிகிச்சை அளித்தனர். டிரேடிங் செயலிகளில் இருந்து, அவரை விலக்கி வைத்தனர். அவரது நிதி நிர்வகிப்பு விஷயங்களை, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க செய்தனர். டிரேடிங் செய்ய வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது, மனதை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என, பயிற்சி அளித்தனர். குடும்பத்தினருடன் கலந்து பழக செய்தனர். இது போன்ற சிசிச்சைக்கு பின், அந்த இளைஞர் குணமடைந்துள்ளார். நிமான்ஸ் டாக்டர்கள் கூறுகையில், 'ஆன்லைன் டிரேடிங்குக்கு அடிமையானதால், அந்த இளைஞர் மன அழுத்தம் உட்பட, பல பிரச்னைகளால் அவதிப்பட்டார். அவருக்கு, 'மல்ட்டிமோடல் பிஹேவியரல் இன்டர்வென்ஷன்' என்ற சிறப்பு சிகிச்சையளித்து குணப்படுத்தினோம்' என்றனர்.