விவசாய குட்டையில் மூழ்கி தந்தை, இரண்டு மகன்கள் பலி
கோலார்: கோலார் மாலுார் தாலுகா நக்கனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் சீனிவாஸ், 40. இவருக்கு சேத்தன், 13, ராஜேஷ், 8, என்ற மகன்கள் உள்ளனர். ஞாயிற்றுகிழமை என்பதால், நேற்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சீனிவாஸ், மகன்களுக்கு நீச்சல் கற்பிக்கும் வகையில், மதியம் அதே கிராமத்தின் பைரப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய குட்டைக்கு, மகன்களை அழைத்து வந்தார். அது மிகவும் ஆழமாக இருப்பது, சீனிவாசுக்கு தெரியவில்லை. குட்டையின் அருகில் செல்லும் போது, கால் தவறி ஒருவர் பின் ஒருவராக நீரில் விழுந்ததில், வெளியே வர முடியாமல் தந்தையும், மகன்களும் மூழ்கி உயிரிழந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த மாஸ்தி போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர்.