உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தனித்தனி இடங்களில் விபத்து இரண்டு ஏட்டுகள் உட்பட 5 பேர் பலி

தனித்தனி இடங்களில் விபத்து இரண்டு ஏட்டுகள் உட்பட 5 பேர் பலி

கதக்: தனித்தனி இடங்களில் நேர்ந்த சாலை விபத்துகளில், இரண்டு ஏட்டுகள் உட்பட, ஐவர் உயிரிழந்தனர். ஹாவேரி நகரின், போலீஸ் கட்டுபாட்டு அறையின், ஒயர்லெஸ் பிரிவில் ஏட்டாக பணியாற்றியவர் ஈரண்ணா, 31. கொப்பால் நகரின், போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றியவர் அர்ஜுன், 29. நண்பர்களான இவர்கள், ஏழு ஆண்டுக்கு முன், போலீஸ் துறையில் சேர்ந்தனர். இருவரும் நேற்று முன் தினம் மாலை, அர்ஜுனின் உறவினர் ரவி நெல்லுாரு, 43, என்பவருடன், கதக்கின், ஹர்லாபுரா அருகில் உள்ள, தேசிய நெடுஞ்சாலை - 67ல், காரில் சென்று கொண்டிருந்தனர். ஈரண்ணா காரை ஓட்டினார். அதிவேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பின் மீது மோதி, பக்கத்து சாலைக்கு பாய்ந்தது. அந்த சாலையில் எதிரே வந்த தனியார் பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில், கார் நொறுங்கியது. மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பஸ் ஓட்டுநர் திலீப்பும், நடத்துநர் ஹீரேஷும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த கதக் போலீசார், மூவரின் உடல்களை மீட்டனர். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தில் இறந்த இரண்டு ஏட்டுகளுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. விரைவில் திருமணம் நடக்கவிருந்தது. காரை அதிவேகமாக ஓட்டி வந்ததே, விபத்துக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. விஜயநகராவின், கானாஹொசஹள்ளியின், பிஷ்டஹள்ளி கிராஸ் அருகில், தேசிய நெடுஞ்சாலை - 50ல் நேற்று மதியம் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னே சென்ற லாரியை முந்த முயற்சித்த பஸ், லாரி மீது மோதிக்கொண்டது. இதில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த, பயணியர் மனோஜ், 28, சுரேஷ், 45, உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த கானாஹொசஹள்ளி போலீசார், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !