உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மருத்துவரை தாக்கிய வழக்கு மாஜி எம்.பி., மனு தள்ளுபடி

மருத்துவரை தாக்கிய வழக்கு மாஜி எம்.பி., மனு தள்ளுபடி

பெங்களூரு: டாக்டரை தாக்கியதாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, பா.ஜ., முன்னாள் எம்.பி., அனந்த குமார் ஹெக்டே தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தர கன்னடா பா.ஜ., முன்னாள் எம்.பி., அனந்த குமார் ஹெக்டே. இவரின் தாய் லலிதா ஹெக்டே, 2017 ஜனவரி 2ம் தேதி, அவரது வீட்டில் கீழே விழுந்ததால், ஹெக்டேயின் சகோரர் ஈஸ்வர் ஹெக்டே, சிர்சியில் உள்ள டி.எஸ்.எஸ்., மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். 'வீல்' சேரில் அழைத்து வரப்பட்ட லலிதா ஹெக்டேவை, டாக்டர் மதுகேஸ்வர் ஹெக்டே, பரிசோதித்தார். 'லலிதாவின் இடது தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்' என்றார். இதற்கு ஈஸ்வர் ஹெக்டே, தன் குடும்ப மருத்துவரிடம் விசாரிப்பதாக கூறி சென்றார். அரை மணி நேரமாகியும் அவர் வரவில்லை. அன்று இரவு 10:00 மணியளவில் அனந்த குமார் ஹெக்டே, அவரது சகோதரர் ஈஸ்வர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவர் மதுகேஸ்வரை அழைத்து தாக்கினர். தடுக்க வந்த மருத்துவமனை ஊழியர் பாலசந்திர பட்டா, ராகுல் மஷ்லேகரை, ஈஸ்வர் ஹெக்டே தாக்கினார். இச்சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதுகுறித்து புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை. ஆனால் மறுநாள் காலை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி, சமூக வலைதளங்கள், செய்திகளில் வெளியாகி பரபரப்பானது. போலீஸ் அதிகாரி ரகுகனாடே செய்த புகாரின் அடிப்படையில், அனந்த் குமார் ஹெக்டே, ஈஸ்வர் ஹெக்டே மீது வழக்குப் பதிவானது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனந்த் குமார் ஹெக்டே மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி சுனில் தத் யாதவ் முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது. அவர் கூறியதாவது: விசாரணை நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாதது, முந்தைய பல உத்தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதன்படி, மனுதாரர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை