ஒரே குடும்பத்தின் நால்வர் கால்வாயில் குதித்து தற்கொலை
பீதர்: கால்வாயில் குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பீதர் நகரின் மைலுார் கிராமத்தில் வசித்தவர் சிவமூர்த்தி, 45. இவரது மனைவி ரமாபாய், 42. தம்பதிக்கு ஸ்ரீகாந்த், 9, ஸ்ரீஷாந்த், 9, ஹிருத்திக், 7, ஏழு மாத ராகேஷ் என, நான்கு மகன்கள். குடும்ப தேவைக்காக, பலரிடம் சிவமூர்த்தி கடன் வாங்கியிருந்தார். தவிர அவருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது. இதனால் மனம் நொந்திருந்த சிவமூர்த்தியும், ரமாபாயும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். நான்கு பிள்ளைகளுடன், காரில் பீதர், பால்கி தாலுகாவின் மரூரு அருகில் உள்ள, காரஞ்சா கால்வாய்க்கு வந்தனர். மகன்களை நீரில் தள்ளிவிட்டு, தம்பதியும் கால்வாயில் குதித்தனர். இதை கவனித்த அப்பகுதியினர், நீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ரமாபாயையும் ஸ்ரீகாந்தையும் மீட்டனர். கால்வாயில் வெள்ளம் அதிகம் இருந்ததால், சிவமூர்த்தி, ஸ்ரீஷாந்த், ராகேஷ், ஹிருத்திக் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த தன்னுார் போலீசார், நால்வரின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.