காஸ் சிலிண்டர் பற்றாக்குறை: அன்னதானம் நிறுத்தம்
பெங்களூரு: காஸ் சிலிண்டர் பற்றாக்குறை, கோவில்களின் அன்னதானத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரின் பனசங்கரி கோவிலில், அன்னதானம் நிறுத்தப்பட்டுள்ளது. மேற்காசியாவில் ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து தாக்குதல் நடத்துகின்றன. இதனால் பதற்றம் நிலவுகிறது. போர் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் காஸ் ஏற்றிய கப்பல்கள் இந்தியாவுக்கு வர முடியாமல், தடைபட்டுள்ளது. இதன் விளைவாக பெட்ரோலிய பொருட்கள், காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காஸ் பற்றாக்குறையால், ஹோட்டல் தொழில் பாதிப்படைந்துள்ளது. வரும் நாட்களில் வீடுகளுக்கும், சமையல் காஸ் சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என, அஞ்சப்படுகிறது. இதற்கிடையே கோவில்களின் அன்னதானத்துக்கும், இடையூறு ஏற்பட்டுள்ளது. பெங்களூரின், பனசங்கரி கோவில் வரலாற்று பிரசித்தி பெற்றதாகும். இங்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அன்னதான பிரசாதம் சாப்பிட்டு மன நிறைவுடன் சென்றனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு, அன்னதானம் தயாரிக்க வேண்டுமானால், அதிக எண்ணிக்கையில் காஸ் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. ஆனால், எதிர்பார்த்த அளவு, சிலிண்டர்கள் கிடைக்கவில்லை. எனவே கோவில் நிர்வாகம் தற்காலிகமாக அன்னதானத்தை நிறுத்த முடிவு செய்துள்ளது. சூழ்நிலை இயல்பு நிலைக்கு திரும்பிய பின், அன்னதானம் மீண்டும் துவங்கப்படும்.