ஹிந்துத்வா பற்றி பேசுபவர்கள் குரலை ஒடுக்க அரசு முயற்சி
உடுப்பி: ''ஹிந்துத்துவா பற்றி பேசுபவர்கள் குரலை ஒடுக்க, காங்கிரஸ் அரசு முயற்சி செய்கிறது. இதற்காக தான் வகுப்புவாத வன்முறை தடுப்பு குழு அமைக்க முடிவு செய்து உள்ளது,'' என்று, கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் தெரிவித்தார்.உடுப்பியில் நேற்று அவர் அளித்த பேட்டி:பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை திசை திருப்ப அரசு முயற்சி செய்கிறது. அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். வகுப்புவாத வன்முறையை தடுக்கும் நோக்கில் தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் வன்முறை தடுப்பு குழு அமைக்க அரசு முடிவு செய்யவில்லை. ஹிந்துத்வா பற்றி பேசுபவர்கள் குரலை ஒடுக்க அரசு முயற்சி செய்கிறது.உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், மூத்த போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு முன்பு, முஸ்லிம் சமூக தலைவர்களை சந்தித்தார். அவர்கள், பரமேஸ்வரை மிரட்டியதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. பி.எப்.ஐ., அமைப்பை பாதுகாப்பதே அரசின் முன்னுரிமையாக உள்ளது.சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கில், முகமது பாசிலின் சகோதரர் ஆதில் மகரூப் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் முகமது பாசில் குடும்பத்திற்கும், சுகாஸ் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, சபாநாயகர் காதர் கூறுகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.