மலை மஹாதேஸ்வரா மலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்புக்கு குழுக்கள் அமைப்பு
சாம்ராஜ் நகர்: சாம்ராஜ் நகர் மலை மஹாதேஸ்வரா கோவிலில் மஹா சிவராத்திரியை ஒட்டி, படிக்கட்டுகள் வழியாக நடந்து வரும் பக்தர்கள் பாதுகாப்புக்காக, எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சாம் ராஜ் நகர் மலை மஹாதேஸ்வரா மலைக்கு, கடந்த மாதம் நடைபயணம் மேற்கொண்ட பக்தர் ஒருவரை, சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால், பக்தர்களிடையே அச்சம் நிலவுகிறது. இந்நிலையில், வரும், 14ம் தேதி மலை மஹாதேஸ்வரா கோவிலில், மஹா சிவராத்திரி திருவிழா நடக்கிறது. இதில், பல மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பர். இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதையடுத்து, மலை மஹாதேஸ்வரா வன விலங்கு சரணாலயத்தின் துணைத்தலைவர் பாஸ்கர் கூறியதாவது: பிப்., 7ம் தேதியான நேற்று முதல் வரும், 20ம் தேதி வரை பக்தர்கள் பாதுகாப்புக்காக தாலுபெட்டாவில் இருந்து மலை மஹாதேஸ்வரா வரை எட்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும், ஒரு குழுவினர் பணியில் ஈடுபட்டிருப்பர். வனத்துறையை சேர்ந்த துணை மண்டல வன அதிகாரி தலைமையில் ஏழு பேர் இருப்பர். ஒவ்வொரு குழுவுக்கும் வாக்கி - டாக்கி, டார்ச் லைட், பட்டாசுகள், லத்திகள் வழங்கப்பட்டு உள்ளன. இது தவிர, மைசூரு சிறுத்தை பணிக்குழு மற்றும் ட்ரோன் குழுக்களும் பணியில் ஈடுபட உள்ளன. இவர்கள், வன விலங்கு நடமாட்டத்தை கண்காணித்து, ரோந்து குழுவினருக்கு தகவல் அனுப்பி கொண்டே இருப்பர். இவ்வாறு அவர் கூறினார். கால்நடையாக வரும் பக்தர்களுக்காக பல்வேறு அமைப்பினர் சார்பில் தண்ணீர், பழங்கள், பழச்சாறுகள் வழங்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் கொண்டுவர தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களை மலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என, வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.