எனக்கு அமைச்சர் பதவி வேண்டும் எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா அடம்
பெங்களூரு: ''என்னுடன் பேச்சு நடத்த யாரும் வர வேண்டாம்; எனக்கு அமைச்சர் பதவி வேண்டும்,'' என, விஜயநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா கூறினார். பெங்களூரின் விஜயநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கிருஷ்ணப்பா. அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளார். மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, முதல்வர் சிவகுமார் பேசியும் பலன் இல்லை. நேற்று காலை கிருஷ்ணப்பா வீட்டிற்கு, கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் சென்றார். அவரும் பேச்சு நடத்தினார். ஆனால், கிருஷ்ணப்பா மனம் மாறவில்லை. பின், கிருஷ்ணப்பா அளித்த பேட்டி: பெங்களூரின் மூத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களில் நானும் ஒருவர். எனக்கு ஏன் அமைச்சர் பதவி தரவில்லை. நானும், என் மகன் பிரியா கிருஷ்ணாவும் பணம் சம்பாதிக்க அரசியலில் இருக்கவில்லை. மக்களுக்கு சேவை செய்ய தான் உள்ளோம். வீட்டு வசதி துறை அமைச்சராக குறைந்த நாட்களே பணியாற்றினேன். அப்போது நான் செய்த சாதனையை யாரும் செய்தது இல்லை. கடந்த முறை எனக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போன போது, எனது ஆதரவாளர்கள் லோக் பவன் முன்பு போராட்டம் நடத்தினர். அவர்களை சமாதானம் செய்து அனுப்பினேன். எனது சீனியாரிட்டியை பார்த்து மேலிடமே பதவி கொடுத்திருக்க வேண்டும். எங்கள் மீது என்ன தவறு உள்ளது. எங்களை மட்டுமின்றி விஜயநகர், கோவிந்த்ராஜ்நகர் தொகுதி மக்களையும் அவமதித்துள்ளனர். எனக்கு அமைச்சர் பதவி வேண்டும். அதை தவிர எதுவும் வேண்டாம். என்னை சமாதானம் செய்ய யாரும் வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். ஹரிபிரசாத் கூறுகையில், ''கிருஷ்ணப்பா எவ்வளவு வேதனை அடைந்துள்ளார் என்று, ராகுலின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். அவர், கிருஷ்ணப்பாவிடம் பேசுவார் என்று நம்பிக்கை உள்ளது. அரசியல் சாத்தியகூறுகள் நிறைந்த விளையாட்டு. எப்போதும் நேர்மறையாக இருந்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்,'' என்றார்.