லிங்காயத்தை தனி மதமாக அறிவித்திருந்தால் சலுகைகள் கிடைத்திருக்கும்: எம்.பி.பாட்டீல்
விஜயபுரா: ''லிங்காயத் தனி மதமாக அறிவிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு எப்போதோ பல வசதிகள், சலுகைகள் கிடைத்திருக்கும்,'' என கனரக தொழில்துறை அமைச்சர் அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.விஜயபுரா மாவட்டம், பாபலேஸ்வராவின் தன்யாலில், பசவேஸ்வரர் சிலையை, மாவட்ட பொறுப்பு வகிக்கும் கனரக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் திறந்து வைத்தார்.பின், அவர் பேசியதாவது:கடந்த 12ம் நுாற்றாண்டில் இருந்து 1881 வரை, லிங்காயத் தனி மதமாக தான் இருந்தது. அதன் பின், மைசூரை ஆட்சி செய்தோர், லிங்காயத்தை, ஹிந்து மதத்துடன் இணைத்து விட்டனர்.பசவண்ணர் கூறிய, 'மதத்தின் மூலக் கொள்கையான கருணையை அடிப்படையாக கொண்ட பசவ தர்மம் பின்பற்றப்பட்டால், உலகில் போர்ச்சூழல் இருக்காது. வரும் நாட்களில், பசவ பாரதமாக மாற வேண்டும். அப்போது தான் நாட்டில் சுதந்திரம், சமத்துவம், நல்லிணக்கம் நிலவும்.கடந்த காலத்தில் லிங்காயத் மதத்துக்கு அங்கீகாரம் பெற, நாங்கள் முயற்சித்தோம். இருப்பினும் சிலர், மதத்தை பிரிக்க முயன்றனர். அப்போதைய மாவட்ட பொறுப்பு அமைச்சர், எம்.பி., அனுமதி அளித்திருந்தால், அனைத்து லிங்காயத் துணை பிரிவுகளும் இன்று பல சலுகைகள் பெற்றிருப்பர்.பாவம் செய்த பாகிஸ்தான் மீது நமது ராணுவம் வரலாற்று சிறப்புமிக்க வான்வழி தாக்குல் நடத்தி உள்ளது. இதன் பின்னணியில் நகர இளைஞர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.இவ்வாறு அவர் பேசினார்.கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, இதுபோன்று லிங்காயத்தை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியபோது, பல்வேறு மடாதிபதிகள், ஒக்கலிகர், லிங்காயத் சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை தொடர்ந்து நடந்த தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.