மின் திருட்டு அதிகரிப்பு பெஸ்காம் திணறல்
பெங்களூரு: மின் திருட்டு அதிகரிப்பதால், பெஸ்காம் எனும் பெங்களூரு மின் விநியோக நிறுவனத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது குறித்து, பெஸ்காம் அதிகாரிகள் கூறியதாவது: கர்நாடகாவின் மிகப்பெரிய மின் விநியோக நிறுவனங்களில், பெஸ்காமும் ஒன்றாகும். மாநிலத்தின் மொத்த மின் தேவையில், 50 சதவீதம் மின்சாரத்தை விநியோகிக்கிறது. ஆனால், ஆண்டு தோறும், மின் திருட்டு அதிகரிப்பது பெஸ்காமுக்கு, பெரும் தலைவலியாக உள்ளது. வருவாய் இழப்புக்கும் காரணமாகிறது. சட்டவிரோதமாக மின் இணைப்பு பெற்று, பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தும், அபராதம் விதித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கூட, மின் திருட்டு குறையவில்லை. மின் திருட்டு குறித்து, 2023 முதல் நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, 11,193 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2-023ல் 12.20 கோடி ரூபாய், 2024ம் ஆண்டில் 12.81 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டு ஆகஸ்ட் வரை, 4.95 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. 2023 முதல் 2025 ஆகஸ்ட் வரை, 64,347 இடங்களில் பெஸ்காம் ஆய்வு செய்து, மின் திருட்டை கண்டுபிடித்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.