பி.எம்.டி.சி., ஏசி பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பயணியர் அதிகரிப்பு
பெங்களூரு: வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால், பொதுமக்கள் பி.எம்.டி.சி., 'ஏசி 'பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். இதனால் இவ்விரு நிறுவனங்களுக்கும் வருவாய் அதிகரிக்கிறது. பெங்களூ ரில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வீட்டை விட்டு வெளியே கால் வைக்கவே, மக்கள் அஞ்சும் சூழ்நிலை உள்ளது. இதுவரை பைக், ஸ்கூட்டர், கார்களில் பயணித்த பலரும், தங்களின் சொந்த வாகனங்களை விட்டு விட்டு, பி.எம்.டி.சி., மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். வெயிலில் பயணிக்க முடியாமல், தங்களின் போக்குவரத்துக்கு குளிர்ச்சாதன வசதி கொண்ட பி.எம்.டி.சி., மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். இதன் பயனாக பி.எம்.டி.சி.,க்கும், பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கும் வருவாய் அதிகரிக்கிறது. போதுமான எண்ணிக்கையில், பி.எம்.டி.சி., ஏசி பஸ்கள் உள்ளன. இதனால் மக்கள் நிம்மதியாக பயணிக்கின்றனர். ஆனால் மெட்ரோ ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகரித்தால் கால் வைக்கவும் இடம் இருப்பதில்லை. குறிப்பாக காலை மற்றும் மாலையில் பயணியர் எண்ணிக்கை, மிகவும் அதிகமாக உள்ளதாக, பயணியர் தவிக்கின்றனர்.