காவிரி நீர் இணைப்பு பெற தவணை முறை திட்டம்
பெங்களூரு: தவணை முறையில் காவிரி நீர் இணைப்புக்கான கட்டணம் செலுத்தும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.பெங்களூரில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை போக்க கடந்த ஆண்டு அக்டோபரில், காவிரி ஐந்தாம் கட்ட திட்டம் துவங்கப்பட்டது. இதன் மூலம், பலரது வீடுகளுக்கும் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.பெங்களூரில் இணைக்கப்பட்ட 110 கிராமங்களை சேர்ந்த 98,000 பேர், காவிரி நீர் இணைப்பை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில், பலர் ஏழைகள் என்பதால், அவர்களால் குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதற்காக, சரலக்காவிரி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், கட்டண தொகையில் 20 சதவீதம் கட்டினாலே, குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மீதமுள்ள தொகையை 12 மாதங்களில் தவணை முறையில் செலுத்தலாம். இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.இதன் மூலம் குடிநீர் இணைப்புகளை அதிகரிக்க முடியும். இதனால், 800 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.