போதையில் ஆட்டோ ஓட்டியவருக்கு நுாதன தண்டனை வழங்கிய நீதிபதி
சாம்ராஜ்நகர்: மது போதையில் ஆட்டோ ஓட்டியவருக்கு, சாம்ராஜ்நகர் நீதிமன்றம் விநோதமான தண்டனை விதித்தது. சாம்ராஜ்நகரில் வசிப்பவர் ராஜசேகர், 35; ஆட்டோ ஓட்டுநரான இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். மது அருந்தி விட்டு ஆட்டோவில் பயணியரை அழைத்து செல்வார். பயணியர் எச்சரித்தாலும் பொருட்படுத்தமாட்டார். கடந்த வாரம், சாம்ராஜ்நகரின் புவனேஸ்வரி சதுக்கத்தில் ஆட்டோவில் சென்றார். அப்போது, போக்குவரத்து போலீசார், அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது, குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். சாம்ராஜ்நகரின் சிட்டி சிவில் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் ராஜசேகர் குடிபோதையில் ஆட்டோ ஓட்டியது உறுதியானது. எனவே, 'குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது' என்ற வாசகம் இடம் பெற்ற பேனரை பிடித்தபடி, பிரதான சாலையில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, நீதிபதி பிரகாஷ், இம்மாதம், 14ம் தேதியன்று ராஜசேகருக்கு உத்தரவிட்டார். அது மட்டுமின்றி 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இதன் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே குறிக்கோள். இதன்படி ராஜசேகர், நேற்று முன்தினம் காலை 10:00 முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல், 6:00 மணி வரை பிரதான சாலையில் நின்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கையில், 'குடித்துவிட்டு வாகனம் ஓட்டாதீர்கள்' என எழுதப்பட்ட பேனரையும் பிடித்திருந்தார்.