மலை மீது அமைந்திருக்கும் பூமியின் கைலாசம்
- நமது நிருபர் - தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் பகுதியில் உள்ள நரஹரி மலையில், நரஹரி பர்வதா சதாசிவ கோவில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரத்தில் உள்ளது. இதை 'பூமியின் கைலாசம்' என பக்தர்கள் அழைக்கின்றனர். இக்கோவில், மஹாபாரதத்தில் இடம்பெற்று உள்ளது. அதாவது, குருஷேத்திர போருக்கு பின், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனரும் தவம் செய்வதற்காக நரஹரி மலைக்கு வந்து உள்ளனர். அப்போது, அர்ஜுனன் குளிப்பதற்காக, நான்கு குளங்களை மலை மீது கிருஷ்ணர் உருவாக்கினார் என மஹாபாரதத்தில் குறிப் பிடப்பட்டு உள்ளது. தற்போதும், இந்த குளங்கள் மலை மீது உள்ளன. சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், கதா தீர்த்தம், பத்ம தீர்த்தங்களின் பக்தர்கள் வழிபடுகின்றனர். சிவராத்திரி, அமாவாசை போன்ற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இக்கோவில் காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திறந்திருக்கும். மலை மீது நின்றுகொண்டு சூரிய உதயம், அஸ்தமனத்தை பார்க்க முடியும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொட்டில் சேவை செய்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த மலையில் உள்ள தீர்த்தம் நம் உடலில் பட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும். எப்படி செல்வது? பெங்களூரிலிருந்து பன்ட்வால் 350 கி.மீ., துாரத்தில் உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்திலிருந்து பஸ் மூலம் மங்களூரை நேரடியாக சென்றடையலாம். மங்களூரிலிருந்து 35 கி.மீ., துாரத்தில் கோ வில் உள்ளது. டாக்சி மூலம் கோவிலை அடையலாம். பெங்களூரு யஷ்வந்த்பூர் ரயில் நிலையத்திலிருந்து 16575 என்ற எண்ணுடைய ரயிலில் பயணிப்பதன் மூலம் பன்ட்வாலை எளிதில் அடையலாம். பன்ட்வால் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 8 கி.மீ., தொலைவில் உள்ளது. எனவே, ஆட்டோ அல்லது டாக்சி மூலம் கோவிலை அடையலாம்.