குட்கா விளம்பரங்கள் அகற்றம் களமிறங்கிய கன்னட அமைப்பு
பெங்களூரு: மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்களில் ஒட்டப்பட்டிருந்த குட்கா தொடர்பான விளம்பரங்களை யுவ கர்நாடகா சங்கத்தினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவின் கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களின் பஸ்களில் குட்கா பொருட்களின் விளம்பரங்கள் ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டு உள்ளன. இது, இளம் தலைமுறையினரை தவறான பாதையில் கொண்டு போவதாக கூறி கடந்த சில நாட்களாக பல்வேறு கன்னட அமைப்பினர் மாநிலத்தின் பல பகுதிகளில் அரசு பஸ்களில் குட்கா தொடர்பாக ஒட்டப்பட்ட விளம்பரங்களை அகற்றி வருகின்றனர். இது குறித்து வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்களின் மீது ஒட்டப்பட்டிருந்த குட்கா தொடர்பான விளம்பரங்களை யுவ கர்நாடகா சங்கத்தினர் அகற்றினர். இது, சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து, அவர்கள் கூறியதாவது: போக்குவரத்து கழகங்கள் லாபம் ஈட்டுவதற்காக அரசு பஸ்களில் குட்கா விளம்பரங்கள் ஒட்டுவது கண்டனத்திற்குரியது. இது இளம் தலைமுறையினரை தவறான வழியில் அழைத்து செல்லும். இதனால், பஸ்களில் உள்ள குட்கா தொடர்பான விளம்பரங்களை நாங்களே அகற்றுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.