கோலார் தாசில்தாருக்கு ரூ.50,000 அபராதம்
கோலார்: பெங்களூரு யஷ்வந்த்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் மல்லிகார்ஜுன் ராஜு, 'கோமல்' எனும், கோலார் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் நிலப்பதிவுகள் குறித்த சில விபரங்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். தகவல் வழங்க வேண்டிய கோலார் தாலுகா தாசில்தார் டாக்டர் நயனா, குறித்த காலத்திற்குள் தகவல்களை தரவில்லை. அதனால், மல்லிகார்ஜூன் ராஜ் தாக்கல் செய்த இரு விண்ணப்பங்களுக்கும், தலா, 25,000 ரூபாய் வீதம், 50,000 ரூபாய் அபராதம் செலுத்த மாநில தகவல் ஆணையர் பக்ரூதின் உத்தரவிட்டுள்ளார். வழக்கின் அடுத்த விசாரணை வரும், 27ம் தேதி காலை 11:00 மணிக்கு நடைபெறும். அந்த விசாரணைக்கு தாசில்தார் நயனா தவறாமல் நேரில் ஆஜராக வேண்டும். விதிக்கப்பட்ட அபராத தொகையான, 50,000 ரூபாயை, தாசில்தாரின் ஜனவரி மாத சம்பளத்திலிருந்து கழித்து, அதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கணக்கில் டிபாசிட் செய்யும்படி, மாவட்ட கலெக்டர் எம்.ஆர். ரவிக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.