தொழுகை நடத்த அனுமதி கூடாது முதல்வருக்கு எத்னால் கடிதம்
பெங்களூரு: பொது இடங்களில் தொழுகை நடத்தத் தடை விதிக்கும்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா எத்னால் கடிதம் எழுதி, வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு, எத்னால் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அரசே புதிய விதிகளை விதித்துள்ளது. இதன்படி பொது இடங்களில் தொழுகை செய்ய, அனுமதி அளிக்கக் கூடாது. அனைத்து சமுதாயங்களும் ஒற்றுமையாக வாழ்வதன் மூலம், அமைதி தோட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம், அனைவருக்கும் பொருந்த வேண்டும். அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள், பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது. அனைத்து சமுதாயத்தினருக்கும், ஒரே விதமான விதிகளை விதிக்க வேண்டும். அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பொது சாலைகளில் தொழுகை நடத்தி, வாகன போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் தொல்லை கொடுப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இது போன்று தொந்தரவு கொடுப்பது, இந்திய அரசியல் சாசனத்தின்படி, சுதந்திரமான நடமாட்டம், பாதுகாப்பு, மனித உரிமைகளை மீறுவதாகும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த கூடாது. எனவே சாலைகள், நடைபாதைகள், பொது இடங்களில் தொழுகை நடத்தாமல் பார்த்துக் கொள்ளும்படி, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். வழிபாடு நோக்கத்துக்கு, பொது இடங்களை பயன்படுத்துவோரை தண்டிக்க, தெளிவான சுற்றறிக்கை வெளியிடுவது குறித்து, அரசு ஆலோசிக்க வேண்டும். சட்டத்தின் முன்பாக அனைத்து சமுதாயத்தவரும் சமம் என்பதை உறுதிப்படுத்தும். போக்குவத்து இடையூறுகளை தவிர்க்கும் நோக்கில், இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.