உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஸ்மார்ட் போன் வைத்து விவசாய நிலத்தில் மாந்த்ரீகம்

ஸ்மார்ட் போன் வைத்து விவசாய நிலத்தில் மாந்த்ரீகம்

பெலகாவி : எலுமிச்சைப்பழம், மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் ஸ்மார்ட் போனையும் வைத்து நிலத்தில் மாந்த்ரீகம் செய்த சம்பவத்தால் விவசாயி பீதி அடைந்துள்ளார். பெலகாவி மாவட்டம், யெள்ளூர் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி சதானந்த தேசாய். கிராமத்தின் புறநகரில் இவருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நேற்று முன்தினம், யாரோ எலுமிச்சைப்பழம், மஞ்சள், குங்குமம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் ஸ்மார்ட் போனையும் வைத்து, மாந்த்ரீகம் செய்திருந்தனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சதானந்த தேசாய், விவசாய சங்கத்தலைவர் ராஜு மரவேவை அங்கு வரவழைத்தார். அவரும் மாந்த்ரீகம் செய்தவர்களை கண்டுபிடிப்பதாக கூறினார். சதானந்த தேசாய் நிலத்தில் பல முறை இவ்வாறு மர்ம நபர்கள் மாந்த்ரீகம் செய்வதால், அவர் கலக்கம் அடைந்துள்ளார். அதிலும், ஸ்மார்ட் போன் வைத்து மாந்த்ரீகம் செய்திருப்பது, கிராமத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நிலத்தில் விளைச்சல் பாழாக வேண்டும் என, யாராவது இது போன்று செய்திருக்கலாம் என, சதானந்த தேசாய் சந்தேகிக்கிறார். இதுகுறித்து, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ