பால், இறைச்சி, முட்டை உற்பத்தி கர்நாடகாவில் அதிகரிப்பு என தகவல்
பெங்களூரு: ''கர்நாடகாவில் கால்நடை மருத்துவமனை, பசுக்கள் சிகிச்சை மையங்களில் 6,757 ஊழியர்கள், உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன,'' என, கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ், மேல்சபையில் தெரிவித்தார். மேல்சபை கேள்வி நேரத்தில், அமைச்சர் வெங்கடேஷ் கூறியதாவது: கால்நடைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கால்நடை மருத்துவமனைகள், பசுக்கள் சிகிச்சை மையங்களில் கால்நடை டாக்டர்கள், உதவியாளர்கள் என, 6,757 ஊழியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. கல்யாண கர்நாடகா பகுதிகளில் 1,149 பணியிடங்கள் காலியாக உள்ளன. தேசிய விவசாய ஆணைய தகவலின்படி, கர்நாடகாவில் 1.38 கோடி மாடுகள் உள்ளன. இவைகளின் சிகிச்சைக்கு 2,770 கால்நடை மருத்துவமனைகள் தேவை. ஆனால் கர்நாடகாவில் 4,166 மருத்துவமனைகள் உள்ளன. இரண்டு மடங்கு அதிகமான மருத்துவமனைகள் உள்ளன. அண்டை மாநிலமான தமிழகத்தில், மிகவும் குறைவான கால்நடை மருத்துவமனைகளே உள்ளன. கால்நடை மருத்துவமனைகளுக்கு, 400 மருத்துவ அதிகாரிகளை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. கே.பி.எஸ்.சி., மூலமாக மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கால்நடைகளை நோய்கள் தாக்காமல், காலா காலத்துக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. மாநிலத்தில் பால், முட்டை, இறைச்சி உற் பத்தி, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இது பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, மிகவும் உதவியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.