போரால் சாதிக்க முடியாது: அமைச்சர் முனியப்பா கருத்து
கோலார் : “நாம் போர் நடத்தி, சுதந்திரம் பெறவில்லை. அஹிம்சை முறையில் சுதந்திரம் பெற்றோம். எனவே அமைதி வழியிலேயே சாதனை செய்ய வேண்டும்,” என, மாநில உணவுத்துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.கோலாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: நம் நாட்டை ஆங்கிலேயர்கள், 200 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். போர் நடத்தி, அவர்களை நாம் வெற்றி பெறவில்லை. அமைதி வழியில் வெற்றி பெற்றோம். அஹிம்சை முறையில் போரிட வேண்டும் என, காந்தி கூறியுள்ளார்.நாம் போர் நடத்தி, சுதந்திரம் பெறவில்லை. அஹிம்சை முறையில் அமைதி வழியில் சுதந்திரம் பெற்றோம். அமைதி வழியிலேயே சாதனை செய்ய வேண்டும். பயங்கரவாதிகள் தேவையின்றி நம் மக்களை கொன்றதால், போர் சூழல் உருவானது.நாம் பாகிஸ்தானுடன் போர் செய்யவில்லை. பொது மக்களை தாக்கவில்லை. பயங்கரவாதிகள் மீது, இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.போர் மூளும்போது, மூத்தவர் ஒருவர் போர் வேண்டாம் என்றால், அவரது பேச்சுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். அதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவுக்கு மதிப்பு கொடுத்துள்ளார். பொது மக்கள் பலரை இந்தியா இழந்துள்ளது.கலவரத்தால், போரால் எதையும் சாதிக்க முடியாது. நாம் மனிதர்கள். மனிதர்களாக வாழலாம். அவரவர் மத கோட்பாடுகளை, அந்தந்த மதத்தவர் பின்பற்றட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.