தர்மஸ்தலா வழக்கு விசாரணை விரைந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர் உத்தரவு
மங்களூரு: தர்மஸ்தலா வழக்கில் விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்கும்படி எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார். தர்மஸ்தலாவில் பல பெண்களின் உடல்களை புதைத்துள்ளதாக பொய் புகார் அளித்த சின்னையா தற்போது சிறையில் உள்ளார். இருப்பினும், அவர் அளித்த புகார் குறித்து எஸ்.ஐ.டி., அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 17ம் தேதி பெல்தங்கடி தாலுகா, பங்காளகுட்டா வனப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, ஐந்து மண்டை ஓடுகள், 100க்கும் மேற்பட்ட எலும்புகள் கிடைத்ததாக தகவல் வெளியாகின. இதையடுத்து, சில நாட்கள் அப்பகுதியில் சோதனை நடத்தினர். பிறகு, 'எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை' என, கைவிட்டனர். இந்நிலையில், நேற்று மீண்டும் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், வனத்துறை அதிகாரி களையும் அழைத்துக் கொண்டு பங்காளகுட்டா பகுதியில் சோதனை நடத்தினர். ஏற்கனவே, எலும்புக்கூடு கிடைத்த இடத்திலேயே நேற்றும் சோதனையிட்டனர். ஆனால், எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை. விசாரணை அறிக்கை தயார் செய்யும் விஷயமாக வந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறியதாவது: தர்மஸ்தலா வழக்கில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கும் அவகாசத்தை அரசு நிர்ணயம் செய்ய முடியாது. அதிகாரிகளின் விசாரணையில் அரசு தலையிடாது. கண்டிப்பாக அவகாசம் தேவைப்படும். டி.என்.ஏ., சோதனை செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். எனவே, தடயவியல் ஆய்வகத்தில் உடனடியாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கூற முடியாது. இருப்பினும், தர்மஸ்தலா வழக்குக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தடயவியல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். தர்மஸ்தலா வழக்கு குறித்த விசாரணை அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க வேண்டும் என எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.