பெங்களூரின் 5 மாநகராட்சிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
பெங்களூரு : கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்ட ஐந்து நகர்ப்புற மாநகராட்சிகளில், கட்சி அமைப்பை உருவாக்கும் நோக்கத்துக்காக, பெங்களூரை சேர்ந்த அமைச்சர்களை, பொறுப்பாளர்களாக நியமித்து, துணை முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கிழக்கு மாநகராட்சிக்கு வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா; மேற்கு மாநகராட்சிக்கு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ்; வடக்கு மாநகராட்சிக்கு மின் துறை அமைச்சர் ஜார்ஜ்; தெற்கு மாநகராட்சிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி; மத்திய மாநகராட்சிக்கு சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் ஆகியோரை பொறுப்பாளர்களாக துணை முதல்வர் சிவகுமார் நியமித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு, சிவகுமார் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: எனக்கு தெரிந்தவரை ஜி.பி.ஏ., ஏற்கனவே நடைமுறைக்கு வந்துவிட்டது. இது தவிர, பெங்களூரை ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஜி.பி.ஏ.,வில் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பல முறை என்னுடன் கலந்துரையாடியபடி, பெங்களூரு நகர எல்லையை சேர்ந்த அமைச்சர்கள், ஐந்து மாநகராட்சி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட உள்ளனர். இந்த ஐந்து மாநகராட்சிக்கு உட்பட்ட கட்சியை ஒழுங்கமைக்கவும், வரவிருக்கும் மாநகராட்சி தேர்தலுக்கு, கட்சியை தயார்படுத்தவும் உதவும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.