உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பி.ஜி.எம்.எல்., பள்ளிகளை மூடக்கூடாது ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு விருப்பம்

 பி.ஜி.எம்.எல்., பள்ளிகளை மூடக்கூடாது ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு விருப்பம்

தங்கவயல்: ''தங்கவயலில் 125 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட பி.ஜி.எம்.எல்., ஆங்கில உயர்நிலைப் பள்ளிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்,'' என, கோலார் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ்பாபு வலியுறுத்தினார். தங்கவயல் பி.ஜி.எம்.எல்., நிறுவன கட்டுப்பாட்டில் இருந்த லிண்சே உயர் நிலைப்பள்ளி, பார்க்கின்சன் நினைவு பள்ளி ஆகியவைகளை நேற்று முன்தினம் பார்வையிட்ட பின், பள்ளியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளுடன் மல்லேஸ்பாபு ஆலோசனை நடத்தினார். மல்லேஸ்பாபு கூறியதாவது: தங்கவயலில் 125 ஆண்டு கால வரலாறு கொண்ட பி.ஜி.எம்.எல்., என்ற பாரத் கோல்டு மைன்ஸ் லிமிடெட் கம்பெனியின் ஆங்கில உயர்நிலைப் பள்ளியை நிர்வகிப்பதற்காக தங்கச் சுரங்க அதிகாரிகள், வட்டார பள்ளி கல்வித்துறை, முன்னாள் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். இப்பள்ளிகளின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்பதை கண்டறிய வேண்டும். அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள், பொறுப்புடன் பணியாற்றி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதுடன், பெற்றோரையும் ஈர்க்க வேண்டும். இது தொடர்பாக வட்டார கல்வித்துறைக்கு தங்கச் சுரங்க நிர்வாகம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இப்பள்ளியை மேம்படுத்த கல்வித் துறை ஆணையரை சந்தித்து பேசுவேன். இப்பள்ளி ஆசிரியர்களின் இரு பிரிவினரிடையே தகராறு காரணமாக, பள்ளியில் கல்வித்தரம் குறைந்துள்ளதாகவும், ஆசிரியைகளை இழிவுபடுத்துவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை